Sunday, October 28, 2012
அழகு ... அழகு.... அழகு...
அழகு என்ற சொல்லுக்கு
அகராதியில் பொருள் பார்த்தேன்...
பிறகு எனக்குத் தெரிந்த
எடுத்துக்காட்டுகளைச் சொன்னேன்:....
வானவில்லின் வண்ணங்கள் ஏழும் அழகு;
மனவீசும் பூக்களின் வண்ண அழகு;
இயற்கையின் பசுமை அழகு;
பரந்த கடலின் அலைகள் அழகு;
விரிந்துள்ள வானத்தின் நீலம் அழகு;
மிதக்கின்ற மேகங்களின் பஞ்சுப்பொதி
அழகு;
கொட்டும் நீர் அருவி அழகு
செதுக்கிய சிற்பங்கள் அழகு.
பாடும் குயில்கள் அழகு;
ஆடும் மயில்கள் அழகு;
மிளிரும் நங்கை அழகு;
தளிர்நடை இடும் குழந்தை அழகு;
அன்னை அவள் சொன்னாள் - முத்தாய் ஒன்று:
"மனிதனுக்கு அழகு -
அவனது நற்குணங்களே " என்று.
ஏழைத் தாயின் மனசு ..
பாத்திரம் தேச்சு, பசி பழகி..
என் வலி மறைத்து
படிப்பவனை படிக்கவைக்க
பலவீட்டு வேலைசெய்தேன்..
பெரிய படிப்புப் படிச்ச
என்மகன் என்னைப் பார்த்து
கேள்வி கேட்டான்;
"படிக்காத உனக்கு என்னத்தெரியும்னு
நீ என்னிடம் பேசவந்துட்ட?"
இராப் பகலா பொத்தி வளர்த்த
எம் மகளும்...
காதல் தாகத்தில் வயசு மோகத்தில்
என்னிடம் கேட்கிறாள் :
"அன்புன்னா என்னவென்று
உனக்கு எங்கே புரியபோகுது?
அன்பகாட்ட உனக்கு உன் புருஷன் இருக்கானா?"
பூக்களுக்கு என்ன கவலை - மரத்தையே
தாங்கும் வேர்களைப் பற்றி?
கேள்விக்கணைகள் மனதை
துளைத்தாலும் பெத்த மனசு
சொல்லுது.."ஆண்டவா அவர்களைக் காப்பாத்து.."
Subscribe to:
Posts (Atom)